கேரளாவில் புயல் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு - 300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக அனுப்புமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்
May 14 2021 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் புயல் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், 300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக அனுப்ப வேண்டும் என முதல்வர் திரு. பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் திரு. மோடிக்கு, கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், கேரளாவில் ஆக்சிஜனுக்கு தேவை அதிகம் இருந்தும் தற்போது தினமும் 212 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய தொகுப்பு அனுப்பப்படுவதாக கூறியுள்ளார். இந்நிலையில், சூறாவளி மற்றும் கனமழை காரணமாக, கேரள ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மற்றும் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் மின்தடை ஏற்படலாம் என்றும், ஆக்சிஜன் விநியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் சூழலில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி உள்ள கேரள முதல்வர், அடுத்த 3 நாட்களில் மாநிலத்தின் தேவை 423 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் கேரள மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பு 24 மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், கேரளாவுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 450 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் திரு. பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.