12-ம் வகுப்பு தேர்வு கணக்கீடு முறை - சிபிஎஸ்இ முடிவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் - விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம் எனவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
Jun 18 2021 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
10, 11-ம் வகுப்பு மதிப்பெண்களுடன் +2 பருவத் தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இருந்தபோதிலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படும் என்பதில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு 30,30,40 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க முடிவெடுத்திருப்பதாக சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 10-ம் வகுப்பு பருவத் தேர்வில், எந்த 3 பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தார்களோ அதிலிருந்து 30 விழுக்காடும், 11-ம் வகுப்பு பருவ தேர்விலிருந்து 30 விழுக்காடும், 12-ம் வகுப்பு உள்ளீட்டுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 40 விழுக்காடும் இணைத்து மொத்தமாக 100 விழுக்காட்டுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என விளக்களிக்கப்பட்டது. வரும் ஜூலை 31-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும், அந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத விரும்பினால் அவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.