மருத்துவம் சாராத சுகாதார ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான நாடு தழுவிய பயிற்சி - திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Jun 18 2021 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவம் சாராத சுகாதார ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று தொடர்பாக நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.
ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான அளவு மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் மருத்துவர்களின் பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலையை கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.
பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு (மருத்துவம் சாராத சுகாதார ஊழியர்கள்) இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படை பராமரிப்பு உதவி, அவசர கால உதவி, கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட 6 வகை பயிற்சிகள் இதில் அடங்கும். இதன் மூலம் சுமார் நாடு முழுவதும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களின் திறன்கள் மேம்படும். ரூ.276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடக்கி வைத்துள்ளார்.