வடமாநிலங்களை புரட்டி எடுக்கும் கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் மேற்குவங்கம், ஹரியானா மாநிலங்கள்
Jul 31 2021 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள துவாரகேஷ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைத் தொடந்து மேற்குவங்கம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேற்குவங்கத்தின் துர்காபூர் பகுதியில் பெய்த கனமழையால் துமினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹூக்ளியின் துவாரகேஷ் ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆற்றுப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் வெள்ளம் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்ததால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை தேசிய பேரிடர் படையினர் மீட்டு வருகின்றனர்.
இதனிடையே, கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இமாச்சலப்பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் ஜஹல்மான் கிராமத்தில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், நிலச்சரிவால் காயமடைந்தோரை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடும் சிரமத்திற்கு இடையே மீட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், சிக்கரில் பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். தொடர் கனமழையால் ஜம்மு காஷ்மீரின் பட்ஷாஹி கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கந்தர்பால்-கங்கன் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.