45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் லக்னோ நகரில் இன்று தொடங்கியது - பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்பு
Sep 17 2021 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜிஎஸ்டி கவுன்சிலின் 45-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில், உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 மாதங்களுக்கு பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.
நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், பெட்ரோல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள், விமான பெட்ரோல் போன்ற குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் பழைய வாட் வரி முறையிலேயே நீடிப்பதால், அவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 45-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும், வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து 5 சதவீத வரி விதிப்பது குறித்தும், 11 கொரோனா மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரி சலுகையை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளரும், வணிக வரித்துறை செயலாளரும் பங்கேற்றுள்ளனர்.