உலகிற்கு தீவிரவாதம்தான் முக்கிய சவாலாக இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு - தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுகோள்
Sep 17 2021 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகிற்கு தீவிரவாதம் தான் முக்கிய சவாலாக இருப்பதாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் திரு. மோடி, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். அஃப்கானிஸ்தானின் தற்போதைய நிகழ்வுகள், உலகிற்கு தீவிரவாதம் தான் முக்கிய சவால் என்பதை நிரூபிப்பதாக தெரிவித்தார். ஆப்கனில் நிலவும் சூழல் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். தீவிரவாதம் மற்றும் அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக பொதுவான வழிமுறைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய ஆசியாவுடன் தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். தொடர்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை ஒரு தரப்பு மட்டுமே எடுக்க முடியாது என்றும், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த, தொடர்பு திட்டங்கள், வெளிப்படைத்தன்மையுடனும், ஆலோசனை செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் திரு. மோடி வலியுறுத்தினார்.