பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது தொடர்பான வழக்கு - ஒட்டுகேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Oct 27 2021 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு அமைத்து உச்சதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த, குழு அமைக்க உத்தரவிடக் கோரி, மூத்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.வி.ரமணா, நீதிபதிகள் திரு.சூர்யகாந்த், திரு.ஹிமா கோலி அமர்வு, இன்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த நிபுணர் குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மக்களின் அந்தரங்க உரிமையை செல்ஃபோன் ஒட்டுக்கேட்பு பாதிப்பதாகவும், பத்திரிக்கையாளர்கள் மட்டுமன்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் அவசியம் என்று கூறினர்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும் என்றும், இணைய குற்றம் மற்றும் தடயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி குழுவில் இடம்பெற்றுள்ளார். சைபர் செக்கியூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுதரியும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளார்.