நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி - எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில் கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்துவது குறித்து வியூகம்
Dec 2 2021 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் போன்றவற்றில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. விவாதம் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் விவகாரத்தையும் எழுப்பி வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், அதுகுறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்களுடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில், அவையை சுமுகமாக நடத்த வியூகங்கள் அமைப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.