மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் 3ம் நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
Dec 2 2021 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரையும், இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு அறிவித்தார். அத்துமீறி நடந்துகொண்ட உறுப்பினர்கள், மன்னிப்பு கோரினால், இடைநீக்க உத்தரவு மறு பரிசீலனை செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. பிரஹலாத் ஜோஷி கூறினார். ஆனால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதையடுத்து 12 எம்.பிக்கள் இடைநீக்க உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என திரு. வெங்கய்யா நாயுடு திட்டவட்டமாக கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலிருந்தும் எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் வெளிநடப்பு செய்ததால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இந்நிலையில், 12 எம்.பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, நாடாளுடன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில். இதே கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.