டெல்லியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் காற்று மாசு தொடர்பான வழக்கு - பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டனம்
Dec 2 2021 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காற்று மாசுபாடு வழக்கில் டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பள்ளிகளைத் திறந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நிர்வாகத்தை நடத்த முடியாவிட்டால் கண்காணிக்க யாரையாவது நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. காற்று மாசுபாடு மிகுந்த மோசமான நிலையிலேயே உள்ள சூழலில், கடந்த 1-ம் தேதிமுதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் டெல்லி அரசு கொடுக்கும் உத்தரவாதங்களை தாங்கள் உண்மை என்றும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆனால் அந்த உத்தரவாதம் செயல்படுத்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர். பள்ளிகள் மூடப்படும் என்றீர்கள்? - ஆனால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்ப்பதாகத் தெரிவித்தனர். நிர்வாகத்தை நடத்த முடியவில்லை என்றால், அதனை கண்காணிக்க யாரையாவது நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தங்களை உத்தரவுகளை பிறப்பிக்க வைக்க வேண்டாம் என்றும், எல்லாவற்றையும் தங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா? எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். காற்று மாசுபாடு இருந்தால், பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் - ஆனால், குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமா? என கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லியில் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்த கள நடவடிக்கைகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை - மாசு அளவு அதிகரித்து வருவதால் எதுவும் நடக்கவில்லை என்றே நாங்கள் நினைக்கிறோம் - தங்களது நேரத்தைதான் வீணடிக்கிறோம் என்றும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், 24 மணி நேரம் அவகாசம் தருவதாகவும், நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் - அப்போது விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுகளுக்கு கெடு விதித்துள்ளது.