கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி -மத்திய அரசு தகவல்
Dec 2 2021 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். பாதிப்புக்குள்ளான 2 பேரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாவர்.
ஒமைக்ரான் வைரஸ் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் திரு. லால் அகர்வால், உலகம் முழுவதும் சுமார் 29 நாடுகளில், 373 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான இருவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாவர் என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பது முழுக்க முழுக்க அவசியம் என்றும் திரு. லால் அகர்வால் தெரிவித்தார். ஒமைக்ரான் வைரஸ்ன் தாக்கத்தால், இதுவரை மோசமான அறிகுறிகள் எதுவும் வெளிப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், விமானநிலையங்களில் RT PCR மூலம் சோதனை செய்யப்படுவதாகவும், அவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நெறிமுறைகள் படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், நெகட்டிவ் முடிவு வருபவர்கள், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த ஒருவாரத்தில், உலகிலேயே ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் 70 சதவீத கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதாவது 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டதாகவும், அதில் 31 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார். இதனுடன் ஒப்பிடுகையில், தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா உட்பட 12 நாடுகளில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக திரு. அகர்வால் தெரிவித்தார்.