பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு - பங்குச்சந்தை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ரூ.3 கோடி அபராதம் செலுத்த செபி நோட்டீஸ்
May 25 2022 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்த குற்றச்சாட்டிற்காக, பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனரான திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், 3 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்த திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி குற்றம் சாட்டியது. இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் முன் அனுபவம் இல்லாத திரு.ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து சலுகைகளை வழங்கியதாகவும் திருமதி.சித்ரா ராமகிருஷ்ணன் மீது புகார் எழுந்தது.
இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து திருமதி. சித்ரா ராமகிருஷ்ணனும், திரு. ஆனந்த் சுப்பிரமணியனும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்த குற்றச்சாட்டிற்காக, திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், 3 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.