உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் - வரும் 26-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்
Jun 23 2022 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் ஆஸம்கர், ராம்பூர் ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கும், பஞ்சாபில் சாங்க்ரூர் மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 26-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில், ஆஸம்கர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த சமாஜவாதி தலைவர் திரு.அகிலேஷ் யாதவ், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல், ராம்பூர் எம்.பி.யாக இருந்த சமாஜவாதி நிர்வாகி திரு.ஆஸம்கானும் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனிடையே, பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் சாங்க்ரூர் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்த திரு.பகவந்த் மான், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனது மக்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். எனவே, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், திரிபுராவில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஆந்திரா, டெல்லி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதி என மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.