நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் - தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தல்
Jul 1 2022 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நபிகள் நாயகம் குறித்த தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் திருமதி. நுபுர் சர்மாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவர், தொலைக்காட்சியில் தோன்றி, தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திருமதி. நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றதுடன், வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதனிடையே, திருமதி. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராஜஸ்தானை சேர்ந்த தையல்காரர் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், தன் மீது பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும், டெல்லிக்கு மாற்றம் செய்யக்கோரி திருமதி. நுபுர் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து இருப்பதால், வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், திருமதி. நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். திருமதி. நுபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டதாக கூறிய நீதிபதிகள், ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதால், எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது என கண்டித்தனர். ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளபோதிலும், அது ஜனநாயகத்தின் வரம்பை மீறக்கூடாது என அறிவுறுத்தினர். திருமதி. நுபுர் சர்மா, தொலைக்காட்சியில் தோன்றி, தனது பேச்சுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், திருமதி. நுபுர் சர்மாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதையடுத்து தனது மனுவை திருமதி. நுபுர் சர்மா திரும்ப பெற்றுக்கொண்டார்.