குஜராத்தில் IELTS சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் பெரும் மோசடி நடந்திருப்பது அம்பலம் - அமெரிக்காவில் பிடிபட்ட குஜராத் இளைஞர்கள் 6 பேருக்கு ஆங்கிலமே தெரியாமல் இருந்த அவலம்
Aug 4 2022 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தில் நடைபெற்ற IELTS சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் பெரும் மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவில் பிடிபட்ட குஜராத் இளைஞர்கள் 6 பேரும் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் பேச தெரியாமல் நீதிமன்றத்தில் திணறியதால் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் IELTS என்று அழைக்கப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கனடா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 6 குஜராத் இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
6 பேரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பியபோது அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியவில்லை. இதனால் இந்தி மொழி பெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. 6 பேரிடமும் IELTS தேர்வு எழுதினீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு IELTS தேர்வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றதாக அவர்கள் பதிலளித்தனர். அப்படி இருந்தும் அவர்களால் ஆங்கிலத்தில் பேச முடியாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரும் குஜராத்திலிருந்து IELTS ஆங்கில தகுதி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மூலம் குஜராத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குஜராத் போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 140 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட IELTS தேர்வில் குஜராத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.