நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது - மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
Aug 6 2022 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு தேர்தல் முடிந்தவுடன், வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டின் 13-வது குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பா.ஜ.க. சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் திரு. ஜகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருமதி. மார்கரெட் ஆல்வாவும் போட்டியில் உள்ளனர். இந்த தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பிக்கள் வாக்களிக்கின்றனர். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் பிரதமர் திரு. மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு முடிந்தவுடன், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான செல்வி மம்தா பானர்ஜி ஆதரவு அளிக்காதது குறிப்பிடத்தக்கது.