உத்தரப்பிரதேச மாநிலத்தில், அண்மையில் பச்சை குத்திக்கொண்ட இருவருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பச்சைக் குத்திக்கொண்ட இவர்கள் இருவரும் தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 2 நபர்களிடமும் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டதில், அவர்களுக்கு அதீத உடல்நலக்கோளாறு இருந்ததும், தீவிர காய்ச்சல் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
நோய்க்கான காரணத்தை கண்டறிய முற்பட்டதில், இருவரும் சில நாட்களுக்கு முன்னர் பச்சை குத்தியுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இவர்கள் இருவருக்கும் பச்சை குத்த பயன்படுத்தப்படும் ஊசி மூலம் தொற்று பாதிப்பு பரவியுள்ளதாக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் நோய் எதிர்ப்பு துறை மூத்த மருத்துவர் பிரீத்தி அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பொதுவாக பச்சை குத்த பயன்படுத்தப்படும் ஊசிகள் குறித்து பெரும்பாலோனாருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பச்சை குத்த பயன்படுத்தப்படும் ஊசிகள் விலை உயர்ந்தவை என்றும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க பச்சை குத்துபவர்கள் ஒரே ஊசியை பயன்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பச்சை குத்திக்கொள்பவர்கள் இப்படி ஒரு ஆபத்து உள்ளது என்பதை முன்கூட்டியே உணருவதில்லை என்றும், பச்சை குத்திக்கொள்ளும் முன்னர் கடைக்காரர் புதிய ஊசியைத்தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
புதிதாக பச்சைக் குத்திக்கொண்டவர்கள், தீவிர நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதுடன், எச்ஐவி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொற்று பாதிப்பு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.