புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் : துணைநிலை ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு
Aug 10 2022 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், துணைநிலை ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் தொடங்கியது. இதற்காக சட்டமன்றத்திற்கு வந்த அவருக்கு, காவலர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துணைநிலை ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சிக்கு ஆளுநர் வேலை செய்வதாகவும், எனவே அவர் உரையாற்ற கூடாதெனவும் முழக்கமிட்டு, எதிர்கட்சி உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். துணைநிலை ஆளுநர், பாஜக தலைவர் போல் செயல்பட்டு வருவதாகவும், எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.