புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் : ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு
Aug 10 2022 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் தொடங்கியது. இதற்காக சட்டமன்றத்திற்கு வந்த அவருக்கு, காவலர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துணைநிலை ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்,
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சிக்கு ஆளுநர் வேலை செய்வதாகவும், எனவே அவர் உரையாற்ற கூடாதெனவும் முழக்கமிட்டு, எதிர்கட்சி உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். துணைநிலை ஆளுநர், பாஜக தலைவர்போல் செயல்பட்டு வருவதாகவும், எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
துணைநிலை ஆளுநரின் உரையை தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் செல்வம், காலவரையின்றி ஒத்திவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திர தின அமிர்த பெருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்த பிறகு, அடுத்த வாரம் சட்டபேரவையை கூட்டி, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பட்ஜெட் தாக்கல் தேதி குறித்து அலுவல் ஆய்வு குழுவை கூட்டி முடிவு செய்யப்படும் எனவும், சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.