குறுகியக்கால விவசாயக் கடன்களுக்கு ஆண்டுக்கு ஒன்றரை சதவீதத்தில் வட்டிக்கு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு
Aug 17 2022 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குறுகியக்கால விவசாயக்கடன்களுக்கு ஆண்டுக்கு ஒன்றரை சதவீதத்தில் வட்டிக்கு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர், மூன்று லட்சம் வரையிலான குறுகியகால விவசாயக் கடனுகளுக்கு ஆண்டுக்கு ஒன்றரை சதவீதத்தில் வட்டிக்கு மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். சுற்றுலா, விருந்தோம்பல் துறைக்கான அவசரக்கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் வரம்பை 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக திரு. அனுராக் தாகூர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் நடப்பாண்டில் வட்டிக்கு மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், விவசாயிகளுக்கான வட்டி மானியத்துக்கு 34 ஆயிரத்து 856 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.