புதுச்சேரியில் 380 குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்பு - புதிதாக 3 குழந்தைகள் உட்பட 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி
Oct 6 2022 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் ஒரே நாளில் 380 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 267 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 81 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 32 பேரும் என மொத்தம் 380 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனர். இதில் 31 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் புதிதாக 3 குழந்தைகள் உட்பட 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருவரும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 2 பேர் என 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.