தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுவதற்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதன்காரணமாக இரண்டு ஆண்டுகள், தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனை எதிர்த்து, மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில், 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில், தமிழக அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றதை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி, போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து, பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் 15-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது, உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று இவ்வழக்கின் விசாரணையின் போது, ஜல்லிக்கட்டு உட்பட, கால்நடைகள் மற்றும் விலங்குகளைக் கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில், மாநில அரசினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாங்கள் மனு தாக்கல் செய்திருப்பதாக பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
காளைகள் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயற்சிக்கும்போது, காளைகள் காயம் அடைவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்பட ஆதாரங்களுக்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எந்தவிதமான ஆய்வும் இல்லாமல் திடீரென இப்படி புகைப்படங்களை தாக்கல் செய்தால் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுவிலும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து யாரும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும், இதன் காரணமாக இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.