பிரதமர் நரேந்திர மோடி நடப்பு ஆண்டில் 7-வது முறையாக இன்று கர்நாடகா வருகை : பெங்களூருவில் புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
Mar 25 2023 10:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் நரேந்திர மோடி 3 மாதங்களில் 7-வது முறையாக இன்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை தருகிறார். இதனையொட்டி, பெங்களூரு மற்றும் தாவணகெராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கடந்த ஜனவரி முதலே பாஜகவும் காங்கிரசும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அதிலும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பாஜக முழு வீச்சில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோர் அடிக்கடி கர்நாடகா வந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடியும் திட்டப் பணிகள் தொடக்கம், நலத்திட்ட உதவிகள் என ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக கர்நாடகம் வருவதை வழக்கமாக்கி உள்ளார். கடந்த ஜனவரி முதல் இதுவரை 6 முறை அவர் கர்நாடகம் வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி வந்த அவர் பெங்களூரு-மைசூரு விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்தநிலையில் 12 நாட்களுக்குள் அவர் மீண்டும் இன்று கர்நாடகா வருகிறார். தனி விமானத்தில் பெங்களூரு வரும் பிரதமர் மோடி, பெங்களூரு கே.ஆர்.புரம் மற்றும் ஒயிட்பீல்டு இடையே புதிதாக மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதற்கு முன்னதாக சத்யசாய் ஆசிரமத்தில் இருந்து ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி காரில் இருந்தபடியே பேரணி செல்கிறார். பின்னர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருக்கிறார். அதைத்தொடர்ந்து தாவணகெரே செல்லும் பிரதமர் மோடி, பா.ஜ.கவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதனையொட்டி, பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.