பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தொடங்கியது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து தங்களது கருத்துக்களை பகிரும் எம்பிக்கள்
Sep 18 2023 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. முதல் நாள் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனை பயணம் குறித்த விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும், ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்கள் இந்தியா நடத்திய ஜி20 மாநாட்டால் சாத்தியமாகியுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் இருந்து இடைவெளியை இந்தியா போக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது கூட்டத்தொடரின் நோக்கம் குறித்து தெளிவுப்படுத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக்குகள் அணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைதி காக்கும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, தற்போதைய நாடாளுமன்ற அவையில் இன்றைய நடவடிக்கைகள் கடைசி நாள் என்றும் நாளை முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்து உரையை முடித்தார்.