ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற 73 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நடிகர் ஷாருக்கான், நடிகை ஜுஹி சாவ்லாவுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்
Mar 25 2017 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற 73 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை ஜுஹி சாவ்லா ஆகியோருக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொண்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 73 கோடியே 60 லட்சம் ரூபாய் அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, அந்த அணியின் உரிமையாளர்களான நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி Gauri, நடிகை ஜுஹி சாவ்லா ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. Fema எனப்படும் அந்நிய செலவாணி முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேரிடம் அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தது. விசாரணை முடிவடையும்போது Fema சட்டத்தின்படி விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஷாருக்கான், அவரது மனைவி மற்றும் நடிகை ஜுஹி சாவ்லா ஆகியோருக்கு நேற்று அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. 15 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு பங்கின் முக மதிப்பு 99 ரூபாயாக இருந்த போதிலும், அதன் உரிமையார்களில் ஒருவரான நடிகை ஜுஹி சாவ்லா மொரிஷீயஸ் நிறுவனத்திற்கு ஒரு பங்கை வெறும் 10 ரூபாய்க்கு விற்றுள்ளார். இப்படி, குறைந்த விலைக்கு விற்றதால், 73 கோடியே 60 லட்சம் ரூபாய் அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.