டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் - காவேரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல் - ஜந்தர் மந்தர் பகுதியில் சில விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் பரபரப்பு
Mar 25 2017 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து இன்று 12-வது நாளாக போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில விவசாயிகள் மரத்தில் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நதிகளை இணைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி, சிறிதும் சிந்திக்காமல் மத்திய அரசு வெறும் 2 ஆயிரத்து 14 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக அறிவித்திருப்பதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி 12-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் சிலர் அப்பகுதிகளில் இருந்த மரங்களில் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற விவசாயிகள் கூடி, தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர்கள் மரத்தில் இருந்து கீழே இறங்கினர்.