சிறு நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் குறைந்த கட்டணத்திலான 3 விமான சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி சிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்
Apr 27 2017 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறு நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் குறைந்த கட்டணத்திலான 3 விமான சேவைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி சிம்லாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்த விமான சேவையில் குறைந்தபட்ச கட்டணமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மத்திய அரசின் புதிய விமான போக்குவரத்து கொள்கையின் கீழ் உதான் எனப்படும் குறைந்த கட்டண விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிம்லா-டெல்லி இடையேயும், ஆந்திர மாநிலம் கடப்பா-ஹைதராபாத் இடையேயும், நாண்டட்-ஹைதராபாத் இடையேயும் 3 சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவைகளை ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கத்துடன் நாட்டிலேயே முதல்முறையாக இந்த குறைந்த கட்டண விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் குறைந்தபட்சமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒரு விமானத்தில் அதிகபட்சமாக பயணிகள் 40 இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். நாட்டில் உள்ள விமான நிலையங்களில் 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில், 128 மார்க்கங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.