காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு - வலுவான குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை
Apr 27 2017 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிர்க்கட்சிகள் சார்பில் வலுவான குடியரசு தலைவர் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் திருமதி. சோனியா காந்தியை, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, புதிய குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, எதிர்கட்சிகள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியை பல்வேறு தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் போட்டியளிக்கக் கூடிய வகையில், வலுவான குடியரசு தலைவர் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.