கோடை விடுமுறையில் இளைஞர்கள் புதிய திறமைகளையும், அனுபவத்தையும் பெற வேண்டும் - விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டவேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள்
Apr 30 2017 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடை விடுமுறையில் இளைஞர்கள் புதிய திறமைகளையும், அனுபவத்தையும் பெற வேண்டும் என்றும், விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும் என்றும் பிரதமர் திரு. மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, வானொலியில் "மனதோடு பேசுகிறேன்" என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடையே உரையாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வைணவ சமயத்தை தோற்றுவித்த ஸ்ரீராமானுஜருக்கு ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படுவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். நமது புதிய இந்தியா என்பது நாட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் கவுரவம் அளிக்கப்படவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார். நமது எண்ணங்களை தூய்மைப்படுத்தவேண்டியே முக்கிய பிரமுகர்களுக்கான வாகனங்களில் பொருத்தப்படும் சிவப்பு விளக்கை நீக்கி, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த கோடை காலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் புதிய அறிவுகளையும், திறமைகளையும் பெறவேண்டும் என அறிவுறுத்திய பிரதமர், விளையாட்டிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதற்காக அருகிலுள்ள மைதானங்களுக்கு சென்று குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். வரும் 5-ம் தேதி இந்தியா தெற்காசிய செயற்கைக்கோளை செலுத்தவிருப்பது குறித்து பேசிய அவர், இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி என்றும், இதன்மூலம் தெற்காசியா முழுவதும் இந்தியா தனது ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.