எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் வேட்பாளர் மீராகுமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சனம்
Jun 24 2017 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் வேட்பாளர் திருமதி. மீராகுமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அம்மாநிலமுதலமைச்சர் திரு. நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் வேட்பாளர் திருமதி. மீராகுமார் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும், ஆனால் பா.ஜ.க சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி. மீராகுமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் விமர்சித்தார். முன்னதாக ''பீகாரின் மகளான மீராகுமாருக்கு ஆதரவு அளிக்காததன் மூலம் நிதிஷ்குமார் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்'' என லாலு பிரசாத் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், லாலு அளித்த இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதிஷ்குமார், அவர் முன்னிலையில் மீராகுமார் தோற்பது உறுதி என கூறியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.