நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் : மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
Jun 26 2017 7:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக, முதல் பிறை தெரிந்ததை அடுத்து, நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பல்லாயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மசூதியில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு ரம்ஜானை கொண்டாடினர்.
தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். சென்னையில் உள்ள புகழ்பெற்ற திருவல்லிக்கேணி மசூதியில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தீவுத்திடலிலும், காலையில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, தொழுகையில் ஈடுபட்டனர்.
மதுரையில் தமுக்கம் மைதானம், மஹபுப் பாளையம் சுன்னத்வல் பள்ளிவாசல் உட்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், பெருந்திரளான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். தீவிரவாதம் ஒழிந்து, நாட்டில் அமைதி திரும்ப வேண்டுவதாகத் தெரிவித்த இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்களுக்காக கழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதையும் நினைவுகூர்ந்தனர்.
இதேபோல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சி, சிவகங்கை, வேலூர், திண்டுக்கல், கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.