சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் செய்வது தொடர்பாக மஹாராஷ்ட்ராவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான குழந்தைகளும், இல்லத்தரசிகளும் ஆர்வமுடன் பங்கேற்பு
Aug 19 2017 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் செய்வது தொடர்பாக மஹாராஷ்ட்ராவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான குழந்தைகளும், இல்லத்தரசிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் விதவிதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகியுள்ளன. சிலை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவித்த தொழிலாளர்கள், பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் செய்வது தொடர்பான பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற்றது. விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் இடுவதால், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கலவை கரையோரங்களில் படிந்து சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை இளம் தலைமுறையினர் உணரும் வகையில், களிமண்ணை மூலப்பொருளாகக் கொண்டு, எளிதில் நீரில் கரையும் விநாயகர் சிலைகளை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் குழந்தைகளும், இல்லத்தரசிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விநாயகர் சிலைகள் செய்து பழகினர்.