பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை - அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல்
Aug 21 2017 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில், கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் சேக் ரோஹேயில் கேட்ட கேள்விக்கு, உள்துறை அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 2012-ம் ஆண்டு 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2013-ம் ஆண்டு 75இந்தியர்களுக்கும், 2014-ம் ஆண்டு 76 இந்தியர்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 15 பேருக்கும், கடந்த ஆண்டு 69 பேருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வரை 15 பேருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை அளித்துள்ளது. ஆக மொத்தம், கடந்த 5 ஆண்டுகளில், பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் கடினமான பணியாக உள்ளது என்றும், இந்தியா, அஃப்கனிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறுவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.