அமெரிக்கா செல்லும் இந்தியப் பணியாளர்கள், சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள் அல்ல என்பதால், அதற்கேற்ற வகையில் H1B விசா கொள்கையை வரையறுக்க வேண்டும் - அமெரிக்காவுக்கு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தல்
Oct 17 2017 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
H1B விசா மூலம் அமெரிக்கா செல்லும் இந்தியப் பணியாளர்கள், சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள் அல்ல என்பதால், அதற்கேற்ற வகையில் H1B விசா கொள்கையை வரையறுக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினரை பணியமர்த்த உதவும் H1B விசா முறையில், கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விதித்தார். இதையடுத்து, H1B விசா முறையைப் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு பெருமளவில் செல்லும் இந்தியர்கள், ட்ரம்ப்பின் H1B விசா கட்டுப்பாடு அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கவலை எழுந்தது.
இந்நிலையில், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி, இந்தியாவிலிருந்து H1B விசா மூலம் அமெரிக்கா வருபவர்கள், திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் எனக் குறிப்பிட்டார். அமெரிக்க பொருளாதார மேம்பாட்டுக்கு, இந்தியர்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருவதாகவும், அவர்கள் எவரும் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறும் தொழிலாளர்கள் அல்ல என்றும் திரு. அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
இந்தியர்கள் அனைவரும், முழுக்க முழுக்க சட்டபூர்வமாகத்தான் அமெரிக்காவில் பணி செய்ய வருகின்றனர். இதனை மனதில் கொண்டு, அதற்கேற்ற வகையில், H1B விசா விவகாரம் குறித்த கொள்கை முடிவுகளை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். இது தொடர்பாக அமெரிக்க நிதி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களை சந்தித்து, இந்தியாவின் கவலையை அருண் ஜேட்லி எடுத்துரைத்தார்.