ஜார்கண்ட்டில் ரேஷன் பொருள் தராததால் பட்டினியால் 11 வயது சிறுமி உயிரிழப்பு - ரேஷன் அட்டையில் ஆதார் எண் இணைக்காததால் உணவுப்பொருள் மறுப்பு என விளக்கம்
Oct 17 2017 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்கண்ட் மாநிலத்தில் ரேஷன் பொருள் தராததால் 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்தார். ரேஷன் அட்டையில் ஆதார் எண் இணைக்காததால் சிறுமி குடும்பத்துக்கு உணவுப்பொருள் தரப்படவில்லை என்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், சிம்டெகா மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்துள்ளார். இவரது குடும்ப ரேசன் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தால், ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவு கிடைக்காமல் சிறுமி இறந்ததாக உணவு உரிமை பிரச்சார ஆர்வலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
துர்கா பூஜை விடுமுறை தினங்களில் பள்ளியில் மதிய உணவும் கிடைக்காமல், சந்தோஷி குமாரி என்ற அந்த சிறுமி, பசியால் கடந்த 8 நாட்களாக அவதிப்பட்டுள்ளார். கரிமதி என்ற கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி ரேசன் பொருட்கள் வாங்க இந்த குடும்பம் தகுதி பெற்றுள்ளது. ஆனால், ஆதார் கார்டுடன் ரேசன் கார்டு இணைக்காத காரணத்தால் கடந்த 6 மாதங்களாக அந்த குடும்பத்திற்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரேசன் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.