சீன எல்லையில் படைகள் விரைந்து குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் : இந்திய ராணுவம் தீவிரம்
Nov 24 2017 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்லாம் பகுதியை மையமாக வைத்து இந்தியா-சீனா இடையே பதற்றம் ஏற்பட்டதையடுத்து, சீன எல்லையில் படைகள் விரைந்து குவிக்கும் வகையில், அங்கு சாலை அமைப்பது உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த 73 இடங்களுக்கு சாலை அமைக்க கடந்த 2005ம் ஆண்டு வலியுறுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் பணி நடைபெறவில்லை. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, டோக்லாம் பகுதியை மையமாக வைத்து இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 73 நாட்கள் வரை இருநாடுகளும் படைகளை குவித்து வைத்தன. இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டால், சீன எல்லையில் படைகளை எளிதில் குவிக்கும் வகையில் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட உள் கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவு, சீன எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு சாலை அமைப்பதற்கான இயந்திரங்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும், மலைப் பகுதிகளை உடைத்து சாலை அமைப்பதற்காக நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. இதுதவிர கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் ஆயிரம் கருவிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் பாலத்தை கட்டுவதற்கான பொருட்கள், திடீர் தாக்குதல் நடைபெற்றால் அதனை சமாளிப்பதற்கு தேவையான வாகனங்கள் ஆகியவற்றையும் எல்லைப் பகுதிக்கு இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது.