குஜராத் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு - இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வர வேண்டுமென பிரதமர் வேண்டுகோள்
Dec 9 2017 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தலில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட பலர் வாக்களித்தனர்.
குஜராத் மாநிலத்தில், மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், ராஜ்கோட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இன்று நடைபெற்று வரும் முதல் கட்ட வாக்குப்பதிவில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் முதலமைச்சர் விஜய் ரூபானி வாக்களித்தார். பவநகர் தொகுதியில் மாநில பாஜக தலைவர் ஜிதுபாய் வகானி தனது வாக்கை பதிவு செய்தார்.
பாருச் தொகுதியிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், திருமணம் செய்து கொள்ளவிருக்கும் புதுமண தம்பதியினர் இல்லற வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் வாக்களித்தனர்.
இதனிடையே, தேர்தலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வரவேண்டுமென பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.