ஆதாரில் முக அடையாளத்தை இணைக்கும் திட்டம் : ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
Jan 16 2018 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆதார் பயனாளர்களின் விவரங்களை சரிபார்க்க விரல்ரேகை பதிவு மற்றும் கண்விழிப்படலத்துடன் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் முக அடையாளத்தையும் சேர்க்க, தேசிய தனிநபர் அடையாள ஆணையமான உதாய் அமைப்பு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், வங்கி கணக்குகள், செல்ஃபோன் எண் போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பல்வேறு தரப்பில் இருந்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், மக்கள் விருப்பத்தின் பேரிலேயே ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனிடையே, ஆதார் பயனாளர்களின் விவரங்களை சரிபார்க்க விரல்ரேகை பதிவு மற்றும் கண்விழிப்படலம் அடையாளமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் முக அடையாளத்தையும் இதில் இணைக்க, தேசிய தனிநபர் அடையாள ஆணையமான உதாய் அமைப்பு முடிவு செய்துள்ளது. ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள கைரேகையுடன், வயதானவர்கள் மற்றும் கடினமான பணிகளில் ஈடுபடுவோர்களின் கைரேகைகள் தேய்ந்து போய், ஒத்துப்போகாமல் இருப்பதால், அவர்களது அடையாளங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்யும் நோக்கில் தற்போது ஆதாரில் முக அடையாளத்தையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதிமுதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.