"பத்மாவத்" திரைப்படத்துக்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடை நீக்கம் - "பத்மாவத்" படக்குழு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
Jan 18 2018 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தணிக்கை செய்யப்பட்ட பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில அரசுகள் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வரும் 25-ம் தேதி பத்மாவத் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் திரைப்படத்தில், ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பல்வேறு சிக்கல்களைக் கடந்து இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா ஆகிய 4 மாநில அரசுகள் படத்தைத் திரையிட தடை விதித்தன.
இதனைத்தொடர்ந்து, தணிக்கை செய்யப்பட்ட பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில அரசுகள் தடைவிதித்தது சட்டவிரோதமானது எனக்கூறிய படக்குழு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் விசாரணை இன்று நடைபெற்றது. இதனையடுத்து, பத்மாவத் படத்திற்கு 4 மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.