பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி : ரயில்வே வாரியம் அமைத்த குழு பரிந்துரை
Jan 19 2018 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.
ரயில்களில் கட்டணத்தை மறு ஆய்வு செய்வதற்காக கட்டண மறு ஆய்வு குழுவை ரயில்வே வாரியம் அமைத்தது. இந்தக் குழு ரயில்வே வாரியத்திடம் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதில், விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களைப் போன்று கட்டண முறையை பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், விமான நிறுவனங்கள் தள்ளுபடி அளிப்பதாகவும், அதுபோன்று ரயில்களிலும் முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி அளிக்கலாம் என்றும், முன்பதிவின்போது, எவ்வளவு காலியிடங்கள் இருக்கின்றன என்பதை பொறுத்து, 20 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை தள்ளுபடி அளிக்கலாம் என்றும் அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது.
பயணிகள் இறுதிப் பட்டியல் தயாரித்த பிறகும் தள்ளுபடி அளிக்கலாம் என்றும்,
ரயில் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி, 2 மணி நேரம் முன்பு வரை முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்களில் கீழ் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் - நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையிலும், பகல் 1 மணி முதல் 5 மணிவரை, சேருமிடங்களுக்கு போய்ச்சேரும் ரயில்களுக்கான கட்டணத்தை குறைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்தலாம் என்றும், மற்ற மாதங்களில் கட்டணத்தை குறைக்கலாம் என்றும், ரயில்வே வாரியம் அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.