அனைத்து மார்க்க போக்குவரத்துகளை துல்லியமாக கண்காணித்து வழிகாட்ட உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் - இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரம்
Apr 11 2018 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்து மார்க்க போக்குவரத்துகளை துல்லியமாக கண்காணித்து வழிகாட்ட உதவும் IRNSS-1i செயற்கைக்கோள், PSLV-C41 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் IRNSS-1i செயற்கைக்கோளை, PSLV-C41 ராக்கெட் மூலம், நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக நாவிக் தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்க முடிவு செய்த இஸ்ரோ, அந்த தொழில்நுட்பத்தை வழங்கும் 7 செயற்கைக்கோள்களில், முதல் செயற்கைக்கோளான IRNSS-1A செயற்கைக்கோளை, கடந்த 2013-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. தொடர்ந்து 6 செயற்கைக்கோள்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் IRNSS-1A செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானதையடுத்து, அதற்கு மாற்றாக IRNSS-1H செயற்கைக்கோள், கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த நிலையில், அந்த செயற்கைகோளை மூடியிருந்த வெப்பத்தகடு சரியாக பிரியாத காரணத்தால், செயற்கைகோள் வெளிவருவதற்கு தடை ஏற்பட்டு, அந்த முயற்சி தோல்வியை தழுவியது.
இதனையடுத்து, ஆயிரத்து 425 கிலோ எடையில் மீண்டும் IRNSS-1i என்ற பெயரில் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை அதிகாலை சுமார் 4 மணியளவில், PSLV-C41 ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 19 நிமிடங்கள் 20 வினாடிகளில் IRNSS-1i செயற்கைகோள், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.