12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் : மத்திய அமைச்சர் மேனகா காந்தி தகவல்
Apr 14 2018 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை எற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கத்வா சம்பவம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து பதிவாகும் வழக்குகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு, ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று தெரிவித்த அவர், 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.
இது தொடர்பான சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் சட்டத்துறைக்கு அனுப்பப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்பொழுது நாடாளுமன்றம் செயல்படாததால், அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு யோசித்து வருவதாகவும், விரைவில் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.