நக்சல் பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் : ஒப்புதல் வழங்க மத்திய அமைச்சரவை திட்டம்
Apr 17 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நக்சல் பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில், நான்காயிரம் செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை விரைவில் வழங்க உள்ளது.
நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில், தொலைத்தொடர்பு சேவைகளை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, நான்காயிரத்து 72 செல்லிடப்பேசி கோபுரங்களை புதிதாக அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலை முதல்கட்டமாக தொலைத்தொடர்பு ஆணையம் வழங்கியுள்ளது. தற்போது அது, மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று, மத்திய உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு, அத்திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், ஜார்கண்டில் ஆயிரத்து 54 கோபுரங்களும், சத்தீஷ்கரில் ஆயிரத்து 28 கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன. அதைத்தவிர, ஒடிசா, ஆந்திரம், பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான மொத்த செலவினம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவற்றை உலகளாவிய சேவைசார் நிதியுதவி அமைப்பு ஏற்றுக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், பாதுகாப்புப் படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி, அதன் வாயிலாக நக்சல் செயல்பாடுகளை ஒடுக்க முடியும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.