நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில், கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் விநியோகிக்க திட்டம்
Apr 17 2018 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில், கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் தற்போது, அரிசி மற்றும் கோதுமை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களால், நாடு முழுவதும் 81 கோடி பேர் பயனடைகின்றனர் என, மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களையும் சேர்ப்பது குறித்து ஆய்வு செய்ய, பிரத்யேகக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தது. நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விநியோகிக்க அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பான அறிவிக்கையை, மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள், இனி நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால், இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.