பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தொடங்கியது நிதி ஆயோக் கூட்டம் - சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பினராய் விஜயன் உள்ளிட்ட முதலமைச்சர்கள் பங்கேற்பு
Jun 17 2018 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில், நீதி ஆயோக் நிர்வாகக் கவுன்சிலின் நான்காவது கூட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து திட்டம், மிஷன் இந்திர தனுஷ், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மத்திய கொள்கைக்குழு எனப்படும் நீதி ஆயோக் அமைப்பின் பிரதான அமைப்பான நீதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் திகழ்கிறது. இந்த கவுன்சிலில், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், மூத்த அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த கவுன்சிலின் நான்காவது கூட்டம், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு, பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையேற்றுள்ளார். முந்தைய கூட்டத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு செயலாக்கம் பெற்றுள்ளன என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து திட்டம், மிஷன் இந்திர தனுஷ் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்தும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதுதவிர, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவது, பிற முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், புதிய இந்தியா-2022 என்ற இலக்கை அடைவதற்கு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சித் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின்போது பங்கேற்றுப் பேசிய ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, போலாவரம் திட்டம், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்தக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.