ஜம்மு-காஷ்மீரில் பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி முறிந்தது - போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகியது பா.ஜ.க.
Jun 19 2018 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை கருதி, ஜம்மு-காஷ்மீர் கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க விலகியதாகவும், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மொத்தமுள்ள 87 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வெற்றிபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியும், 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. மெஹ்பூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பாரதிய ஜனதா கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சி அமைந்ததுமுதல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியற்ற நிலையே நீடித்து வந்தது.
கடந்த ரமலான் பண்டிகையையொட்டி தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும், பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்காமலும் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரமலானையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர கலவரம் வெடித்தது. இரு தினங்களுக்குமுன் பாதுகாப்பு படையினரை எதிர்த்து நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலை முறியடிக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் காஷ்மீர் மாநில பொறுப்பாளர் ராம் மாதவ், நாட்டின் பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் கருதி, மாநில அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், மக்கள் ஜனநாயகக் கட்சி தவறிவிட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சி முன்வைத்த மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றுவதில் மக்கள் ஜனநாயக கட்சி முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் ராம் மாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மெஹ்பூபா முப்தி, பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் வோராவிடம் அளித்தார்.