4வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி பல்லாயிரக்கணக்கானோருடன் இணைந்து யோகாவில் ஈடுபட்டார்.
ஆண்டுதோறும், ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்தியாவின் புகழ்பெற்ற நகரங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் இன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் திரு.நரேந்திரமோடி பங்கேற்றார்.
வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 55 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் யோகாவில் ஈடுபட்டார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. வெளிநாடுகளிலும், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில், சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். தலைநகர் டெல்லியில், 8 இடங்களில் யோகா பயிற்சி நடைபெறுகிறது.
ஆந்திராவின் அமராவதி நகரில் அம்மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் பனி பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள், யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள துறைமுகத்தில், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலில், கடற்படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு யோகாவில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி கலந்துகொண்டு யோகாவில் ஈடுபட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் யோகா கலை நிபுணர் திரு.பாபா ராம்தேவ் தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகாதின கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகாவில் ஈடுபட்டனர். அம்மாநில முதலமைச்சர் வசுந்தராராஜே உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். உலக கின்னஸ் சாதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.