கடன் பெற்று முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர், புனே காவல் துறையின் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் விஜய் கும்பார் என்பவர், டி.எஸ்.கே. என்ற கட்டுமான நிறுவனத்துக்கு பாங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கி, எந்த வகையில் எவ்வளவு கடன் அளித்துள்ளது என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களை கேட்டுப் பெற்றார். அப்போது, போதிய ஆவணங்கள் ஏதுமின்றி, டி.எஸ்.கே. நிறுவனத்துக்கு, சுமார் இரண்டாயிரம் கோடி கடன் அளிக்கப்பட்டது தெரிய வந்தது.
டி.எஸ்.கே. நிறுவனத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்த 12 ஆயிரம் பேரின் பணத்தையும், நிரந்தர வைப்பு செய்த எட்டாயிரம் மூத்த குடிமக்களின் நிதியையும் டி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் தலைவர் குல்கர்னி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, குல்கர்னி மற்றும் அவரது மனைவி ஹேமாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குல்கர்னி மகன் சிரீஷ், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், இரண்டாயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான ரவீந்திர மாத்தே, அவருக்கு முன்பு இப்பொறுப்பை வகித்த சுஷில் முனோத் ஆகியோர், புனே காவல் துறையின் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர, வங்கியின் செயல் இயக்குநர் ரஜேந்திர குப்தா, பிராந்திய மேலாளர் நித்யானந்த் தேஷ்பாண்டே, டி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் சில அதிகாரிகள், ஆடிட்டர் உள்ளிட்டோரும் கைதாகியுள்ளனர்.
இவர்கள் அனைவர் மீதும், குற்றச்சதி, ஏமாற்றுதல், ஊழலில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் தலைவர் குல்கர்னி உள்ளிட்டோருடன் இணைந்து, வங்கிப் பணம் இரண்டாயிரம் கோடி ரூபாயை முறைகேடு செய்தனர் என்பது, இவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டாகும்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முறைகேடு, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.