மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்வது பாரதிய ஜனதாவுக்கு பழக்கமாகிவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Jun 23 2018 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்வது பாரதிய ஜனதாவுக்கு பழக்கமாகிவிட்டதாக தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, வரும் பொதுத் தேர்தலிலும் பா.ஜ.க. முறைகேடு செய்து வெற்றிபெற முயற்சிக்கும் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க.வினர் இதற்கு முன் முறைகேடு செய்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் பல்வேறு முறைகேடுகளில் அவர்கள் ஈடுபடலாம் என்றும் கூறினார். குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில், வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றிபெற பாரதிய ஜனதா முயற்சிக்கும் என்றும், ஆதலால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், பாரதிய ஜனதாவினர், சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்றும், மதவெறி பிடித்தவர்கள் என்றும் கடுமையாக சாடினார்.
இதனிடையே, சீனாவில் 9 நாட்கள் மேற்கொள்ள விருந்த தனது பயணத்தை மம்தா பானர்ஜி இறுதி நேரத்தில் ரத்து செய்துள்ளார். நேற்று இரவு அவர் சீனாவின் பீஜிங் நகருக்கு குழுவினருடன் செல்ல திட்டமிட்டிருந்தார். கலாச்சார பரிவர்த்தனை நிகழ்வில் பங்கேற்குமாறு அவருக்கு கடந்த மார்ச் மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று சீனா செல்ல இருந்த மம்தா, தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். பயணத்தால் பலன் எதுவும் விளையப் போவதில்லை என்று மம்தா தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் நடைபெற இருந்த நிகழ்ச்சி குறித்து உயர் மட்ட அளவில் உறுதி செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.