மும்பையில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : ரயில், விமான சேவைகள் கடும் பாதிப்பு - கனமழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
Jul 11 2018 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரயில், விமான சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கின்றன. அண்டை மாவட்டங்களான தாணே மற்றும் பால்கரிலும் கன மழையின் தாக்கம் தொடர்கிறது. மும்பையின் சாலைகள் மற்றும் தெருக்களில் இடுப்பளவு நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமான துளசி ஏரி நிரம்பி வழிகிறது.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி உள்பட பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கியிருந்த குழந்தைகள் உள்பட 66 பேரை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இதேபோல் பால்கர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.
மும்பையின் கொலாபா பகுதியில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 165.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேற்கு மண்டல ரயில்வேயில் புறநகர் ரயில் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தொலைதூர ரயில்கள் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் 9 ரயில்களும், 3 இன்டர்சிட்டி ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. நகர்ப்புற ரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் தேங்கியிருக்கும் மழை நீரை உறிஞ்சி வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மோசமான வானிலை காரணமாக 407 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி, யவத்மால் மாவட்டத்தில் 4 பேரும், தானே, பால்கர் மாவட்டத்தில் தலா ஒருவரும், மும்பை பெருநகரில் ஒருவரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 7 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதனிடையே இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை போல மீண்டும் ஒரு பாதிப்பை மும்பை பெருநகரம் சந்திக்குமோ என்ற அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.